உள்ளூர் செய்திகள்

இறந்தவர் உடலை ஆற்று தண்ணீரில் தூக்கிச் செல்லும் அவலம்

Published On 2023-08-21 14:43 IST   |   Update On 2023-08-21 14:43:00 IST
  • 50 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருவதாக வேதனை
  • தரைமட்ட மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வேலூர்:

வேலூர் மாவட்டம், கணியம்படி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சுகொண்டா புரம் ஊராட்சி, மேதலபாடி கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்களில் யாரேனும் இறந்தால் அவர்களை புதைப்பதற்காக மேதலப்பாடி வழியாக செல்லும் கமண்டல நாகநதி ஆற்றின் வழியாக சென்று ஆற்றின் மறுகறையில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டி உள்ளது.

மழைக்காலங்களில் ஆற்றில் அதிக அளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த சமயத்தில் இறந்தவர்களின் உடலை தண்ணீரில் சிரமத்துடன் தூக்கி சென்று அடக்கம் செய்கின்றனர். சுமார் 50 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

நாகநதி ஆற்றை கடந்து செல்ல தரைமட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேதலபாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ரேவதி பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

ஆற்றில் தற்போது தண்ணீர் செல்வதால் உடலை தோள் மீது சுமந்தபடி ஆற்று தண்ணீரில் இறங்கி, சிரமத்துடன் கடந்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News