உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.

கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்-டி.ஐ.ஜி எச்சரிக்கை

Published On 2022-06-09 15:23 IST   |   Update On 2022-06-09 15:23:00 IST
  • கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்-டி.ஐ.ஜி எச்சரிக்கை பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள அறிவுறுத்தினார்.
  • இணைய வழி குற்றங்கள் தடுக்க சைபர் கிரைம் போலீசார் நியமனம்.

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேற்று இரவு திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது பணியில் இருந்த காவலர்களிடம் பணி குறித்தும் கேட்டறிந்தார் காவலர்களிடம் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வது குறித்து அறிவுறுத்தினார் குற்ற வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு சம்பந்த மான பதிவேடுகளை ஆய்வு செய்தார். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை காவல்துறையினருக்கு வழங்கினார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி உள்ளிட்ட போலீஸார் உடனிருந்தனர்.

தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டி அளித்த வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா கூறியதாவது:-

தமிழக டிஜிபி உத்தரவின்பேரில் கந்து வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டும் நபர்கள், வசூலிப்பவர்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் பொதுமக்களின் சொத்துக்களை தவறான முறையில் எழுதி வாங்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், தைரியமாக கந்து வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் அவர்கள் கூறும் புகார்கள் குறித்து பொறுமையுடன் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணைய வழி குற்றங்கள், டிஜிட்டல் வழி குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் இதனை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டம்தோறும் சைபர் கிரைம் போலீசார் உள்ளனர்.

தற்போது இந்த குற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் சைபர் கிரைம் போலீசார் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

பொதுமக்களும் தேவையில்லாத ஆப்புகளை செல்போனில் டவுன்லோட் செய்வது தவிர்க்க வேண்டும் இணையதளத்தில் விளையாட்டுகளை டவுன்லோட் செய்து அதன் மூலம் விளையாடுபவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பணம் திருடப்படுகிறது.

தேவை இன்றி வரும் எஸ்எம்எஸ் களுக்கு பதில் அளிக்க கூடாது மேலும் வங்கியிலிருந்து பேசுபவர்கள் எனக் கூறிக்கொண்டு எந்தவித தகவலும் கேட்டாலும் தெரிவிக்கக் கூடாது.

மேலும் கடன் வசூலிக்கும் வங்கி ஏஜென்ட் என பொதுமக்களை மிரட்டும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் காவலன் ஆப்பை டவுன்லோட் செய்து அதன்மூலம் பயன்படுத்தவேண்டும் வேலூர் சரக முழுவதும் சைபர் கிரைம் போலீசார் பள்ளி கல்லூரிகளில் இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து விரிவாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

மேலும் பொதுமக்கள் இணையவழி குற்றங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இலவச தொலைபேசி எண் 19 30 பயன்படுத்த வேண்டும்.

குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் சில தினங்களுக்கு முன் பழனி என்பவரை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளது.

அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்தும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் சிறுவர்கள் குளிக்கவோ விளையாடவோ நீச்சலடிக்க செல்லும் போது பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் உடன் சென்று அவர்களைப் பாதுகாப்பான முறையில் அழைத்துச் சென்று வரவேண்டும் என்றார்.

Tags:    

Similar News