உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் கரன்சி பரிமாற்றம் தொடர்பாக செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தால் ஏமாற வேண்டாம்

Published On 2022-11-06 14:12 IST   |   Update On 2022-11-06 14:12:00 IST
  • சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
  • புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

வேலூர்:

டிஜிட்டல் கரன்சி குறித்து செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ்சை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை கடந்த 1-ந்தேதி வெளியிட்டது. இதற்கு டிஜிட்டல் ரூபாய் (மொத்த விலை பிரிவு) என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதில் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து, இதர பரிமாற்றங்களுக்கும் இந்த கரன்சியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்நிலையில், மர்மநபர்கள் டிஜிட்டல் கரன்சி தொடர்பாக பொதுமக்களின் செல்போனுக்கு குறுந்தகவல் மற்றும் போன் செய்து பணத்தினை பறித்து வருகின்றனர். இதுகுறித்த புகார்கள் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் கூறுகையில், 'டிஜிட்டல் கரன்சி நடைமுறை மூலம் பணம் பரிமாற்றம் செய்து தருவதாக போன் அழைப்புகள் அல்லது குறுந்தகவல்கள் மூலம் மர்மநபர்கள் தங்களை அணுகுவார்கள். அந்த செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள்.

புகார் தெரிவிக்காம்

தங்களின் பணத்தை அவர்கள் அபகரித்து விடுவார்கள். எனவே தேவையில்லாத அழைப்புகளோ, குறுந்தகவல்களையோ நம்பி மர்மநபர்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம். இது தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.

Tags:    

Similar News