இறந்த ஜான் சீனா என்ற காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.
நூற்றுக்கணக்கான பரிசுகள் வென்ற ஜான் சீனா காளை சாவு
- ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம்
- பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள குப்புக்கொட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.
இவர் பல ஆண்டுகளாக ஜான் சீனா என்ற ஒற்றை கொம்புள்ள காளை மாடு வளர்த்து வந்தார். இந்த காளை மாடு விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றது.
இதனை இவரது உறவினரான வீரிச்செட்டி பல்லி கிராமத்தைச் சேர்ந்த ரவி, கோபி என்ற சகோதரர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வளர்த்து எருது விடும் விழாக்களில் பங்குபெற செய்தனர்.
இந்த காளை பல்வேறு ஊர்களில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான பரிசுகளை வென்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலூரில் உள்ள தனியார் கால்நடை மருத்து வமனையில் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஜான் சீனா காளை இறந்தது. அதைத்தொடர்ந்து ஏராளமானோர் கண்ணீர் மல்க காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து, மலர் மாலைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலையில் ஜான் சீனாவின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.