மகள், பேரன் சாவு; ஆதரவின்றி தவிக்கும் முதியோர் தம்பதி
- வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் மனு
- இதுபோன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் நடைபெறாமல் தடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை பழைய முன்சீப் கோர்ட்டு தெருவை சேர்ந்தவர் காஞ்சனா. இவரது மகன் ஆனந்த் (வயது 26).
இவர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் அமைப்பு மூலம் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைக் ஓட்டிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து சில நாட்களுக்கு பின்னர் மகன் இறந்த துக்கம் தாளாமல் காஞ்சனாவும் காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காஞ்சனாவின் பெற்றோர் சிட்டிபாபு, லோகம்மாள் இன்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும் எனது மனைவியும் மகள் மற்றும் பேரன் அரவணைப்பில் வாழ்ந்து வந்தோம். இருவருமே இறந்து விட்டதால் நாங்கள் ஆதரவின்றி வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எனது பேரன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் விபத்தில் உயிரிழந்தான்.
எனவே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய தனியார் அமைப்பு சார்பில் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் போதிய இழப்பீடு வழங்கவில்லை.
இதனால் கூடுதல் இழுப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.