உள்ளூர் செய்திகள்

வேலூர் டாக்டர் வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை

Published On 2022-07-28 09:28 GMT   |   Update On 2022-07-28 09:28 GMT
  • கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களுக்கு வலைவீச்சு
  • கைரேகை பதிவாகாமல் நூதனமாக திருடிய கும்பல்

வேலூர்:

வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்ணன் (வயது 52), வேலூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுப்ரியா. இவர் வேலப்பாடியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

டாக்டர் வீட்டில் கொள்ளை

இந்த தம்பதியினருக்கு 16 வயதில் பிளஸ்-1 படிக்கும் மகள் உள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த டாக்டர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 22-ந் தேதி கணவன்-மனைவியும் வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இதையொட்டி அவர்களின் மகளை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். அந்த நேரத்தை பயன்படுத்தி மர்மநபர்கள் வீடு புகுந்து 24 பவுன் நகை ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷியாமளா, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று உறவினருடன் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டனர். போலீஸ் மோப்பநாய் டாக்டர் தம்பதி வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு வேலப்பாடி பஸ்நிறுத்தம் வரை ஓடிச்சென்று நின்று விட்டது.

நூதனமாக திருடிய கும்பல்

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால் மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராக்களின் அனைத்து காட்சிகளும் சேகரித்து வைக்கப்படும் டிஸ்க்கையும் எடுத்து சென்றிருந்தனர். இதையடுத்து போலீசார் எதிர் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை 2 மணியளவில் 2 வாலிபர்கள் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த வாலிபர்கள் குறித்து வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

டாக்டர் வீட்டில் கொளை நடந்த பகுதிகளில் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தபோது அதில் எந்த கைரேகையும் சிக்கவில்லை கொள்ளையர்கள் கையுறை அணிந்து திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது அதனால் தான் கைரேகை எதுவும் சிக்கவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News