அரசு ஊழியர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டுள்ள காட்சி.
கேமரா காட்சிகள் வைத்து போலீசார் விசாரணை
- அரசு ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
- கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வடகாத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணாளன் (வயது 45). ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி கல்பனா (36) அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல தங்கள் பிள்ளைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றனர்.
கல்பனா பணி முடிந்து மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 60 பவுன் நகை, 2 லட்சம் மதிப்புடைய வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளி கொண்டா போலீசாருக்கு கல்பனா தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த கேமராவில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரின் அடையாளம் பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.