உள்ளூர் செய்திகள்

வேலூர் காகிதப்பட்டறையில் பொதுமக்கள் மறியல் செய்த காட்சி.

வாலிபரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-08-27 14:17 IST   |   Update On 2023-08-27 14:17:00 IST
  • நகைக்காக மூதாட்டி அடித்து கொலை செய்த வழக்கு
  • ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

வேலூர்:

வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவரது மனைவி ராதாம்மாள் (வயது 71). இவர்களுக்கு ஜெயக்குமார் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர்.ராதாம்மாள் கடந்த 24-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார்.

அவர் தனியாக இருப்பதை அறிந்த வாலிபர் ஒருவர் அங்கு வந்து திடீரென ராதாம்மாளை தாக்கினார். மேலும் அவரது மூக்குத்தியையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த வாலிபரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேடினர். ஆற்காடு சாலை தனியார் மருத்துவமனை அருகே இருந்த வாலிபரை பிடித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து ராதாம்மாளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ஜெயக்குமார் தனது தாயாரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார்.

அப்போது போலீசில் ஒப்படைக்கப்பட்ட வாலிபர் அங்கு இல்லை. அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் புகார் மனுவை கொடுத்துவிட்டு ஜெயக்குமார் அங்கிருந்து சென்று விட்டார். இந்த நிலையில் ராதாம்மாள் நேற்று காலை திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராதம்மாளை தாக்கி கொலை செய்த வாலிபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி காகிதப்பட்டறையை சேர்ந்த பொதுமக்கள் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பழனிமுத்து, ரவி, டில்லிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். மறியல் காரணமாக வேலூர் ஆற்காடு சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News