வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு
- ரோஜா பூ, சாக்லெட் கொடுத்து வரவேற்பு
- பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
வேலூர்:
கோடை விடுமுறைக்கு பிறகு இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர் கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
அவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை தந்த மகிழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆர்ப்பரித்தனர்.
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.சில குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல அடம் பிடித்து அழுது கொண்டே சென்றனர். அவர்களை பெற்றோர்கள் சமாதானம் செய்ததை காணமுடிந்தது.
சில பள்ளிகளில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாணவ மாணவிகளுக்கு பூக்கள் வழங்கியும் மேளதாளத்துடன் வரவேற்று அழைத்து சென்றனர்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,266 அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. தொரப்பாடி மற்றும் அணைக்கட்டு அரசு பள்ளிகளில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.