உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசிய காட்சி. 

வழக்குகளை விரைந்து முடிக்க நீதித்துறை கட்டமைப்பை சரி செய்ய வேண்டும்

Published On 2023-01-25 09:50 GMT   |   Update On 2023-01-25 09:50 GMT
  • வி.ஐ.டி. கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் வக்கீல் வி.சி.ராஜ கோபாலாச்சாரியின் நினைவு கருத்தரங்கு நடைபெற்றது. வி.ஐ.டி. வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டி. பிஸ்னஸ் பள்ளி முதல்வர் வி.வி.கோபால் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுகிறது என்பது உண்மையே.

இதற்கு சரியான காரணங்கள் கூற முடியாது. வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நீதித்துறை கட்டமைப்பை சரி செய்ய வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் கோர்ட்டு கட்டிடங்கள், அறைகள், காத்திருப்பு அறைகள், பார்அசோசியேஷன் அரங்கம் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும்.

சுதந்திரம் அடைந்த பின்னர் நாம் பல நீதிமன்றங்களை உருவாக்கி உள்ளோம். நீதிபதிகள், அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதித்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அதில், 40 சதவீதம் மாநில அரசின் பங்கு உள்ளது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் நிதி பற்றாக்குறை என்று சரியாக நீதித்துறைக்கு நிதி வழங்கப்படாமல் உள்ளது. இளம் வக்கீல்கள் ஏழை, ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழக்கில் நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுநாதன் பேசியதாவது:-

வக்கீல் ராஜ கோபாலாச்சாரி எனது குரு ஆவார். சொத்து, சேமிப்பு உள்ளிட்டவற்றில் நம்பிக்கை இல்லாதவர். அன்றைக்கு சம்பாதிக்கும் பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் குணம் உடையவர். குழந்தைகளுக்கு பெற்றோர் சொத்து சேர்த்து வைப்பதை விட நல்ல கல்வி கொடுக்க வேண்டும். கோர்ட்டில் ஒரு வழக்கில் தீர்வு காண்பதற்கு நீண்ட காலம் ஆகிறது.

அதனால் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட, உயர்நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் 70 ஆயிரம் வழக்குகள் தீர்வு காணப்படாமல் உள்ளன. வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றார்.

முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வி.சி.ராஜகோபாலாச்சாரியின் உருவப்படத்துக்கு வி.ஐ.டி. வேந்தர் கோ. விசுவநாதன், என்.வி.ரமணா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத்தலைவர் டாக்டர்.சேகர் விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, வக்கீல் விஜயராகலு, மூத்த வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News