வேலூருக்கு ஒரே நாளில் கவர்னர், முதல்அமைச்சர் வருகை
- முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- புதிய பஸ் நிலையம், கோட்டை மைதானம், அரசு சுற்றுலா மாளிகை ஆகிய இடங்களில் போலீசார் குவிப்பு
வேலூர்:
வேலூரில் நாளை புதிய பஸ் நிலையம் திறப்பு விழா மற்றும் கோட்டை மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.இதில் முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஆகியவை சார்பில் வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மகாலில் நாளை பாலாறு பெருவிழா தொடங்குகிறது. இந்த விழாவை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைக்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து கவர்னர் நாளை காலை கார் மூலமாக வேலூர் வருகிறார். நாராயணி பீடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.விழா முடிந்ததும் அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.
ஒரே நாளில் தமிழக கவர்னர் மற்றும் முதல் - அமைச்சர் வருவதால் வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் புதிய பஸ் நிலையம், கோட்டை மைதானம், அண்ணா சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.