உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்த காட்சி.

குடியாத்தத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

Published On 2022-08-20 16:11 IST   |   Update On 2022-08-20 16:11:00 IST
  • பல்வேறு கட்டுப்பாடுகள்
  • இந்து முன்னணி, பா.ஜ.க.வினர் வெளிநடப்பு

குடியாத்தம்:

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் தாலுகா பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் குறித்து போலீசார், வருவாய்த்துறை, அரசியல் கட்சியினர், இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு உதவி கலெக்டர் எஸ். தனஞ்செயன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார்கள் விஜயகுமார், கீதா, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ்குமார், மாவட்ட பொருளாளர் ஜி.பி.மூர்த்தி, கிளை செயலாளர் கே மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கே.சாமிநாதன், பாரதிய ஜனதா கட்சி நகரத் தலைவர் ராஜாசெல்வேந்திரன், மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார், மாவட்டத் துணைத் தலைவர் சுகுமார், நகர பொதுச்செயலாளர் ரங்கநாதன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் டி.கே.தரணி, பி.பிரபாகரன், நகரத் தலைவர் வி.கார்த்தி, ஒன்றிய தலைவர் ஜி.கே.ரவி, இந்து தேசிய கட்சி மாவட்ட தலைவர் எஸ்.சதீஷ்குமார் உள்பட விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய உதவி கலெக்டர் தனஞ்செயன் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் குறித்து வெளியிட்டுள்ள விதிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். விநாயகர் சிலை பீடத்திலிருந்து 10 உயரத்தில் இருக்க வேண்டும், விநாயகர் சிலை வைக்கும் இடம் இரும்பு தகடால் அமைக்க வேண்டும், கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது, மத வழிபாடு மற்றும் பள்ளி, மருத்துவமனைகளுக்கு அருகே சிலைகள் வைக்கக்கூடாது, விநாயகர் சிலைகள் வைத்த பின் 3 நாட்களுக்கு பின் கரைக்க எடுத்துச் செல்ல வேண்டும்,

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும்போது பட்டாசுகள் வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மின்சாரத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையிடம் அனுமதி வாங்குவது குறித்தும் தெரிவித்தனர்.

அப்போது இந்து முன்னணியினர், பா.ஜ.க.வினர் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தை தடுக்கும் விதத்தில் இது போன்ற விதிமுறைகள் உள்ளது. பல்வேறு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் அனைத்து அனுமதியும் ஒரே இடத்தில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பாஜக கட்சியினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது அதிகாரிகள் நீங்கள் கூறும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

இருப்பினும் இந்து முன்னணியினர் பாஜக கட்சியினர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News