மோர்தானா அணையில் இருந்து உபரிநீர் வெளியேறும் காட்சி.
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் வெள்ளம்
- மோர்தானா அணையிலிருந்து 700 கன அடி நீர் வெளியேற்றம்
- தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் தீவிரம்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணை குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை யாகும் கடந்த 2000-ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.
சுமார் 11.50 மீட்டர் உயரமும் 261 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி, புங்கனூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையாலும், மோர்தானா அணையின் முக்கிய நீர் பிடிப்பு ஆதாரமான ஆந்திர மாநிலம் புங்கனூர் அடுத்த பெத்தபஞ்சாணி பகுதியில் உள்ள பெரிய ஏரியான மாடிஏரி நிரம்பி வழிவதால் மோர்தனா அணைக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது. அணை 9 சென்டி மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து அணையின் நீர்மட்டம் 11.56 மீட்டராக உயர்ந்தது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 844 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது.
அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மோர்தானா அணைக்கு முக்கிய நீர் ஆதாரமான பலமநேர், புங்கனூர், கோட்டூர்புரம், மாடிஏரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் வருவாய் துறையினரும், நீர்வளத் துறையினரும் 24 மணி நேரமும் மோர்தானா அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வழிந்தோடி வருகிறது. குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை நள்ளிரவு வெள்ளம் தாண்டி சென்றது. காலை முதலே பொதுமக்கள் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை காண திரண்டு வந்து பார்த்து செல்கின்றனர்.
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் மோர்தானா அணை நீர் செல்லும் கவுண்டன்யா மகாநதி கரைப்பகுதியில் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கெங்கையம்மன் கோயில் தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
மோர்தானா அணையில் இருந்து அதிக அளவு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டதால் தரைப்பாலும் சீரமைக்கும் பணிகளை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேபோல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் போலீசார் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்வது மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு உத்தரவு பேரில் நகராட்சி ஊழியர்கள் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் கரை பகுதியிலும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.