வேலூர் கோட்டை அகழியில் வெள்ள பாதிப்பு மீட்பு ஒத்திகை நடந்த காட்சி.
வேலூர் கோட்டை அகழியில் வெள்ள பாதிப்பு மீட்பு ஒத்திகை
- உதவி கலெக்டர் தவறி விழுந்ததால் பரபரப்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு வெள்ளம் போன்ற இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி வேலூர் கோட்டை அகழியில் இன்று காலை நடந்தது.
இதை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, வேலூர் தாசில்தார் செந்தில், நகர் நல அலுவலர் முருகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் அப்துல் பாரி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், முதலுதவி எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை அகழி ஓரம் உள்ள படிக்கட்டு பகுதியில் வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி நின்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் நிலைத்தடுமாறி படிக்கட்டில் விழுந்தார்.
அருகில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அவரை தூக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.