ரோந்து போலீசாரின் வாகனங்களை பார்வையிட்ட வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன்.
வேலூர் மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் 53 இடங்கள் கண்டுபிடிப்பு
- டி.ஐ.ஜி. முத்துசாமி பேட்டி
- புதிதாக பேரிகார்டுகள், சாலை பாதுகாப்பு கூம்புகள் அமைக்கப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விபத்துகளை தடுக்கும் வகையில் புதிதாக பேரிகார்டுகள், சாலை பாதுகாப்பு கூம்புகள் வாங்கப்பட்டுள்ளன. இதனை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து போலீஸ் நிலையங்களின் ரோந்து இருசக்கர வாகனங்களையும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அப்போது டி.ஐ.ஜி. முத்துசாமி, சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் ஒளி பிரதிபலிப்பான்கள் உள்ளிட்டவை பழுது ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
பின்னர் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021, 2022 -ம் ஆண்டுகளில் அதிக விபத்து ஏற்பட்டன. இது கடந்த காலங்களை விட15 சதவீத விபத்துகள் அதிகமாகும். இதையடுத்து போலீசார் சார்பில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஏன்? விபத்துகள் நடக்கிறது என்பதை கண்டறிய ஆலோசனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் ஜனவரி மாதம் 95 விபத்துகளும், பிப்ரவரி மாதம் 89 விபத்துகளும், மார்ச் மாதம் 73 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.
இதன் மூலம் விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளதை காண முடிகிறது.
ஜனவரி மாதம் 26 பேரும், பிப்ரவரி மாதம் 18 பேரும், மார்ச் மாதம் 16 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.விபத்துகள் ஏற்படவும், உயிரிழப்புகள் அதிக ஏற்படவும் அதிக காரணம் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதே. விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு உபகரணங்கள் தேவை. வேலூர் மாவட்டத்தில் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 485 பேரிகார்டுகளும், சாலை பாதுகாப்பு கூம்புகளும் வாங்கப்பட்டுள்ளன.
இந்த பேரிகார்டுகள் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்களை தடுக்கும் வகையில் ஆங்காங்கே சாலையில் வைக்கப்பட உள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூரில் இயங்கி வந்த 5 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விபத்து ஏற்பட்டால் உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வந்தன. தற்போது அவர்களுக்கு கூடுதலாக விபத்துகள் ஏற்படாத வகையில் பணி மேற்கொள்ளவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது இவர்கள் வழக்குப்பதிவு செய்ய மாட்டார்கள்.அவர்கள் குறைந்தது போக்குவரத்து விதிகளை மீறும் 100 பேரை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 53 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் காவல்துறையும் வி.ஐ.டி. யும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு எதனால் விபத்து ஏற்படுகிறது, விபத்தை எவ்வாறு தடுக்கலாம் என்பது உள்ளிட்டவை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வேலூர் சரகத்தில் விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளது, உயிரிழப்புகளும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
விபத்துகள் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. எனவே வேலூர் சரகத்தில் அனைத்து காவலர்களும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் கண்ணில் படும்படியாக சாலையில் நின்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடபட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் மட்டும் 16 சதவீதம் விபத்துகளால் ஏற்படும் மரணம் குறைந்துள்ளது. போக்கு வரத்து விதிகளை மீறுபவ ர்களுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்க வேண்டும்.
வெளிமாநில குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் ரோந்து வாகனங்கள் அதிகப்படுத்தி உள்ளோம்.
மேலும் ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் சோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதங்களில் ஒப்பிடும்போது மார்ச் மாதம் குற்ற வழக்குகள் குறைந்துள்ளன.
கிராமங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.