உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி

Published On 2023-11-15 13:34 IST   |   Update On 2023-11-15 13:34:00 IST
  • 2 மாநில வனத்துறையினர் விசாரணை
  • பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்

வேலூர்:

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம் செல்லும் சாலையில் உள்ள பத்தலப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது.

இதனால அந்த வழியாக செல்லும் போது மக்கள் மிகவும் அச்சமடைந்தனர். பெரும்பாலானோர் அந்த வழியில் இரவு நேரத்தில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டனர்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திர வனப்பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் பெண் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிறுத்தை உயிரிழந்த பகுதி ஆந்திர வனப்பகுதி என்பதால் இது குறித்து ஆந்திர மாநில வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த ஆந்திர மாநில வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்த சிறுத்தையை கொண்டு சென்றனர். இது குறித்து ஆந்திரா மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News