பைக்குகள் மோதி டிரைவர்-பிரியாணி கடை ஊழியர் பலி
- பொங்கல் பண்டிகையில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அலமேலுமங்கா புரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25) லாரி டிரைவர்.இவரது நண்பர் ராகுல். இருவரும் நேற்று இரவு தொரப்பாடி சென்று மருந்து வாங்கிக் கொண்டு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
சாய்நாதபுரம் பாதுஷா நகரை சேர்ந்தவர் காசிம் (22). பிரியாணி கடை ஊழியர். அவரது நண்பர் சலீம் ஆகியோர் வேலூரில் இருந்து சாய்நாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.ஆரணி ரோட்டில் தினேஷ் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.இதில் பலத்த காயமடைந்த அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் காசிம் பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட விஜயகுமார் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார்.
வேலூர் தெற்கு போலீசார் இறந்தவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதி வேகமாக பைக் ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை நாளான நேற்று நடந்த இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. பண்டிகை கொண்டாட வேண்டிய குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.