உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்

Published On 2022-10-10 15:27 IST   |   Update On 2022-10-10 15:27:00 IST
  • கொரோனாவையொட்டி நிறுத்தப்பட்ட பஸ் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை
  • போலீசார் பேச்சுவார்த்தை

வேலூர்:

வேலூர் அடுத்த கீழ்மொணவூரில் உள்ள மாணவ மாணவிகள் வேலூரில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

பொதுமக்கள் போராட்டம்

மாணவ, மாணவிகள் வசதிக்காக கீழ்மொணவூரில் இருந்து வேலூருக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த பஸ் இயக்கப்படவில்லை.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இது பற்றி தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

துணை தாசில்தார் திவ்யா போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேலூரில் இருந்து கீழ்மொணவூருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவ மாணவிகள் வசதிக்காக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. கொரோனாவால் பஸ் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு மீண்டும் இயக்கப்படவில்லை.

தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பஸ் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News