உள்ளூர் செய்திகள்

காட்டுப்பன்றி வேட்டையாடிய கட்டிட மேஸ்திரி கைது

Published On 2023-01-04 15:05 IST   |   Update On 2023-01-04 15:05:00 IST
  • உடல் பாகங்கள், இறைச்சி பறிமுதல்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கே.வி.குப்பம் மகாதே வமலை அடிவாரத்தில் காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக வேலூர் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார், உதவி வன பாதுகாவலர் மணி வண்ணன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனத்துறையினர் நேற்று காலையில் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் பகுதியில் ஒரு வீட்டின் அருகே திடீர் சோதனையை நடத்தினர்.

அப்போது அங்கு காட்டுப்பன்றியின் உடல் பாகங்கள் மற்றும் இறைச்சி இருந்தது. வனத்துறையினர் விசாரணை நடத்திய போது அதே பகுதியைச் சேர்ந்த சக்திபாலன் (வயது 32) என்பவர் நாட்டு துப்பாக்கியால் காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்று வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து வனத்துறையினர் சக்தி பாலனிடமிருந்து நாட்டு துப்பாக்கி, வேட்டையாட பயன்படுத்தும் கருவிகள், காட்டுப் பன்றியின் உடல் பாகங்கள் மற்றும் இறைச்சியை கைப்பற்றி குடியாத்தம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் கட்டிட மேஸ்திரியான சக்திபாலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News