வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க வந்த காட்சி
இலவச வீட்டு மனை பட்டா வழங்க லஞ்சம்
- பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
- பட்டா பெயர் திருத்தத்திற்கும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
குடியாத்தம் அடுத்த தனகொண்ட பல்லி அருகே உள்ள கொட்டமிட்டா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
ஏழைகள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது.
இலவச வீட்டு மனை பட்டா வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்படுகிறது.
இதனால் கூலி வேலை செய்யும் ஏழைகள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர்.
எனவே இலவச வீட்டு மனை பட்டாவிற்கு லஞ்சம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
வேலூர் அடுத்த பொய்கை மோட்டூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் அக்னி வேல்முருகன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் பெயர் திருத்தம் உள்ளிட்டவைகளுக்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் மனு அளித்து உள்ளனர்.
மனுக்கள் அதிகமாக இருப்பதால் அதனை விசாரித்து தீர்வு காண காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.
எனவே பிறப்பு இறப்பு சான்று சிறப்பு முகாம் நடத்துவது போல் பட்டா பெயர் திருத்தத்திற்கும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.