வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்ற காட்சி.
வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி
- ரூ.14 லட்சம், 37 கிராம் தங்கம், 295 கிராம் வெள்ளி இருந்தது
- அதிகாரிகளின் முன்னிலையில் எண்ணப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலத்தில் ஒன்றான வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சிறப்பு திருவிழா நடைபெறும்.
இங்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப கோழி உருவங்கள், பணம், தங்கம், வெள்ளி போன்றவைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 வாரத்திற்க்கு பிறகு நேற்று எல்லையம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி, வேலூர் சரக ஆய்வர் சுரேஷ்குமார் , குடியாத்தம் சரக ஆய்வர் பாரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதில், பக்தர்கள் ரூ. 14 லட்சத்து 6 ஆயிரத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் நேரடியாக 37 கிராம் தங்கம், 295 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
காணிக்கை எண்ணும் பணியில் விரிஞ்சிபுரம் மார்க்கப்பந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர், வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் சரவணபாபு மற்றும் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.