உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம். மையத்தில் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டுள்ள காட்சி.

ஏ.டி.எம். மைய கண்ணாடிகள் உடைப்பு

Published On 2023-05-05 10:03 GMT   |   Update On 2023-05-05 10:03 GMT
  • குடியாத்தத்தில் பரபரப்பு
  • மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது

குடியாத்தம்:

திருவண்ணாமலையில் ஒரே நாளில் பல ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தீவிரமாக செயல்பட்டு வட மாநில கொள்ளையர்களை கைது செய்து வருகின்றனர்.

இதனையடுத்து ஏ.டி.எம். மையங்கள் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது.

கடந்த மாதம் குடியாத்தம் நேதாஜிசவுக் பகுதியில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கிஏ.டி.எம்.மில் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் கற்களைக் கொண்டு ஏடிஎம் கண்ணாடிகளை உடைத்தார். அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து ரோந்து பணியில் இருந்து போலீசார் விரைந்து வந்து கற்களால் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி உடைத்த நபரை பிடித்து விசாரித்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணைக்கு பின் அந்த நபரை விரட்டி விட்டனர். குடியாத்தம் பகுதியில் ஏடிஎம் எந்திரம் கல்லால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News