உள்ளூர் செய்திகள்

சிம்ம குளத்தில் நீராடி கோவில் வளாகத்தில் படுத்து பெண்கள் வேண்டிய காட்சி.

மார்க்கபந்தீஸ்வரர் கோவில் சிம்ம குளத்தில் நள்ளிரவில் பெண்கள் நீராடி வழிபாடு

Published On 2022-12-11 14:27 IST   |   Update On 2022-12-11 14:27:00 IST
  • கடை ஞாயிறு விழா நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

'திருவிரிஞ்சை மதிலழகு' என்பது சொல்வழக்கு. திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திரு முடியை கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் என்பது தல புராணமாகும்.

பிரம்மா இத்திருத்தலத்தில், சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.

முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலுக்கு அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய் முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம். அல்லது கனவில் மலர்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றைத் தாங்கியபடி முதியவர் காட்சி தந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படி வேண்டிக்கொண்டு குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தை பிறந்த பிறகு, மரகதாம்பிகை அம்பாள் சன்னதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.

இவ்வாறு பழம் பெருமை வாய்ந்த மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை கடை ஞாயிறு விழாவானது நேற்று நள்ளிரவு 11.55 மணியளவில் சிம்மகுளம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 12.00 திறக்கப்பட்டது.

இதில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தார். சிம்ம குளம் சிறப்பு பூஜையில் ஏ. பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு மற்றம் பலர் கலந்து கொண்டனர்.

சிம்ம குளம் திறந்த பின்னர் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பெண்கள் சிம்ம குளத்தில் நீராட அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிம்ம குளத்தில் நீராடி கோபுர வாசலில் படுத்து இறைவனை நோக்கி குழந்தை வரம் வேண்டினர். மேலும் கார்த்திகை கடை ஞாயிறு விழாவில் தமிழக மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவில் கூட்டம் கூட்டமாக வருகை தந்திருந்தனர்.

Tags:    

Similar News