மாடு விடும் விழாவில் பரிசுகளை வென்ற அஞ்சா சிங்கம் காளை திடீர் சாவு
- மேளதாளம் முழங்க அடக்கம் செய்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூரை அடுத்த ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளயம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது50). பூதூர் ஊராட்சி மன்ற தலைவி கவிதாவின் கனவர்.
இவர் அஞ்சா சிங்கம் என்ற பெயரில் காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தார். 17 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த இந்த காளை ஒவ்வொரு ஆண்டும், சுற்றுவட்டாரத்தில் நடக்கும் எருது விடும் விழாவில், பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது.
சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இந்த காளை மாட்டிற்கு ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த காளை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
அந்த காளைக்கு , மேள தாளம், கண்ணீர் அஞ்சலி பேனர், பட்டாடைகள் மற்றும் மலர் மாலைகள் கொண்டு இறுதி சடங்குகளை செய்தனர்.
கிராம மக்கள், ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் காளை மாட்டிற்கு மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து காளை மாடு அடக்கம் செய்யப்பட்டது.