கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசிய காட்சி. அருகில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார்.
கால்வாய், தெருக்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை
- கேமரா மூலம் கண்டுபிடிக்க உத்தரவு
- ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் முடிவு
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இது தவிர குப்பைகள் இல்லாத மாநகரமாக உருவாக்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமலில் உள்ளது.
ஆனாலும் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் நகரின் அழகு பாதிக்கப்படுகிறது.
வேலூர் மாநகராட்சி பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து மாநகராட்சி துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் மேற்பார்வை அதிகாரிகள் ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் துப்புரவு அலுவலர்கள் சிவக்குமார் லூர்துசாமி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது;
வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம் பிரிப்பு மையங்களில் குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி விடுவதாக புகார்கள் வந்துள்ளது. அப்படி இனி வர வாய்ப்பு அளிக்கக்கூடாது.
குப்பைகளை முழுமையாக சேகரித்து தரம் பிரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.வெளியில் குப்பை கொட்டுபவர்களை கண்டுபிடிக்க வேண்டும். மக்கும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கழிவு நீர் கால்வாய்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். மீறி கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். குப்பைகள் வெளியில் வீசப்படுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தலாம். பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும. நகரம் தூய்மையாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.