உள்ளூர் செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணிடம் கலெக்டர் தரையில் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பெண் தர்ணா

Published On 2022-10-17 09:55 GMT   |   Update On 2022-10-17 09:55 GMT
  • கலெக்டரும் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்
  • கைது செய்ய உத்தரவு

வேலூர்:

வேலூர் அடுத்த ஓதியத்தூர் மலை கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். திடீரென அவர் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் நினைவு அரங்கம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விசாரித்தார். தனது தந்தை பெயரில் உள்ள வீட்டுமனை நிலத்தை குறைவாக காண்பித்து பட்டா வழங்கியிருக்கிறார்கள்.இது பற்றி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விஜயலட்சுமி கூறினார்.

அப்போது கலெக்டர் மீண்டும் ஒருமுறை மனு தாருங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன் என்றார். ஆனாலும் விஜயலட்சுமி எனக்கு தீர்வு கிடைத்தே தீர வேண்டும் மனு அளிக்க முடியாது என்றார்.

உடனே கலெக்டரும் தரையில் அமர்ந்து விஜயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் இருந்த ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார். கலெக்டர் தரையில் அமர்ந்து குறை கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் நீங்கள் மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு விசாரணைக்கு செல்லுங்கள் என கலெக்டர் கூறினார். ஆனாலும் அவர் செல்ல மறுத்தார்.

இதனால் அவரை கைது செய்ய உத்தரவிட்ட கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். விஜயலட்சுமியிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனது நிலத்திற்கான பிரச்சனையை தீர்க்க அதிகாரிகள் முன் வரவில்லை இதற்காக மனு அளித்து அலைக்கழித்ததில் எனது தந்தை இறந்தே விட்டார். அவரை கொன்று விட்டீர்கள் என கண்ணீர் மல்க கூறினார்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News