உள்ளூர் செய்திகள்

கோவிலில் திருட முயன்ற வாலிபருக்கு அடி-உதை

Published On 2023-05-16 15:26 IST   |   Update On 2023-05-16 15:26:00 IST
  • பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
  • 2 பேர் தப்பி ஓட்டம்

வேலூர்:

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள நாகநதி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது.

பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையை செலுத்தி வந்தனர். அந்த பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த நிலையில் இன்று அதிகாலை காளியம்மன் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் கோவில் உண்டியலை உடைத்தனர்.

பக்கத்து வீட்டை சேர்ந்தவர் உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது 3 பேர் உண்டியலை உடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டார்.

இவரது சத்தம் கேட்ட கிராம மக்கள் திரண்டு ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட 3 பேரும் அங்கிருந்து பக்கத்தில் உள்ள தோட்டத்திற்குள் தப்பி ஓடினர்.

விடாமல் துரத்திச் சென்ற பொதுமக்கள் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். 2 பேர் சிக்காமல் தப்பி சென்றனர். பிடிப்பட்ட கொள்ளையனை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் வேலூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் வேலூர் அடுத்த சித்தேரியை சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 19) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News