உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன உணவு விநியோக ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல்

Published On 2023-01-27 15:32 IST   |   Update On 2023-01-27 15:32:00 IST
  • அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவல்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை சேர்ந்தவர் திருமலைவாசன் (வயது 22) இவர் வேலூர் மாநகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் உணவு சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு சுமார் 10 மணிக்கு காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உணவு சப்ளை செய்வதற்காக பைக்கில் சென்றார்.

அப்போது பின்னால் வந்த 3 பேர் அவரது பைக் மீது மோதியுள்ளனர்.இதனை திருமலைவாசன் தட்டி கேட்டார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த 2 பேரும் சேர்ந்து திருமலை வாசனை சரமாரியாக தாக்கினர்.

ஒரு கட்டத்தில் அவர் சுய நினைவை இழந்து தரையில் விழுந்தார். அப்போதும் விடாமல் அவர்கள் அவரை தாக்கியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் சாலையில் வந்தவர்கள் திருமலை வாசனை மீட்டனர்.

இது குறித்து உடனடியாக காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆபத்தான நிலையில் இருந்த திருமலை வாசனை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமலைவாசன் சுய நினைவு இல்லாமல் மீட்கப்படும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பாக காணப்படும் தனியார் பல்கலைக்கழக பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News