75-வது சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி
- தபால் துறை சார்பில் நடந்தது
- 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் தபால் துறை சார்பில் இந்திய திருநாட்டின் 75 -வது சுதந்திர தின விழா முன்னிட்டு தபால் ஊழியர்கள் மற்றும் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணிக்கு தபால் துறை திருப்பத்தூர் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார்.குடியாத்தம் கோட்ட உதவி கண்காணிப்பாளர் பிரேமாவதி, போஸ்ட் மாஸ்டர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரணியை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார்.
குடியாத்தம் காட்பாடி ரோடு நான்குமுனை சந்திப்பு அருகில் இருந்து புறப்பட்ட பேரணி தலைமை அஞ்சல் அலுவலகம் வழியாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் நிறைவு பெற்றது.
மூத்த வழக்கறிஞர் எஸ்.சம்பத்குமார் பேரணியை நிறைவு செய்தார்.
இந்தப் பேரணியில் வணிக மேலாளர் ராஜேஷ் தலைமை தபால் ஊழியர் சிவகுமார், உதவி அலுவலர் எழில்மாறன், மெயில் ஓவர்சீஸ் சீனிவாசன் உள்பட தலைமை அஞ்சல் ஊழியர்கள், துணை தபால் ஊழியர்கள், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் தேசியக்கொடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.