வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை அதிரடி வேட்டையில் 118 ரவுடிகள் சிக்கினர்
- குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை என எச்சரிக்கை
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
வேலூர், ஜன.14-
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எவ்வித குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. பின்னர் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் உத்தரவு படி கடந்த 4 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.
இதில் சரித்திர பதிவேடு கொண்ட 26 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 29 ரவுடிகள் மீது பிரிவு 110 குற்ற விசாரணை நடைமுறை சட்ட படி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் நடத்தையை கட்டுப்படுத்த வேண்டி உதவி கலெக்டர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.
மேலும் 63 ரவுடிகள் மீது பிரிவு 110 குற்ற விசாரணை நடைமுறை சட்ட படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.