108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்
- பெண் குழந்தை பிறந்தது
- தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா லக்ஷ்மணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு விவசாயி. இவரது மனைவி காயத்ரி ஒன்பது மாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக மேல் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்து வமனைக்கு அழைத்து செல்ல இன்று காலை 108 ஆம்புலன்ஸ் க்கு பரிந்துரை செய்தனர். இதை அடுத்து மருத்துவ உதவியாளர் சதீஷ் மற்றும் டிரைவர் குமரவேல் ஆகியோர் 108 ஆம்புலன்சில் மேல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்தனர்.
அங்கு பிரசவ வலியில் இருந்த காயத்ரியை ஆம்புலென்சில் ஏற்றிக் கொண்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோக்கி விரைந்தனர். பொய்கை அருகே செல்லும் வழியில் காயத்திரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் சதீஷ் பிரசவம் பார்த்தார்.
அப்போது அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும் சேயும் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.