உள்ளூர் செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரமளித்தால் ரூ.200 அன்பளிப்பு - வேலூர் மாநகராட்சி அதிரடி

Published On 2022-10-09 12:59 GMT   |   Update On 2022-10-09 12:59 GMT
  • பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் ரூ.200 அன்பளிப்பு வழங்கப்படும்.
  • வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என வேலூர் மாநகராட்சி அறிவித்தது.

வேலூர்:

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது. இதனால் குப்பையை சாலைகளில் கொட்டுவது, காலி இடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதனை தடுக்க அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து அளிக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் காலிமனைகளில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன.

தெருக்கள், கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையைக் கொட்டினால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும்.

அதேநேரம், குப்பையை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 அளிக்கப்படும் என வேலூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Tags:    

Similar News