திருக்கோவிலூரில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல்
- துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- அந்தந்த துறையின் லோகோ ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை ஒட்டி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் கூறியதாவது;-
திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்டவைகளில் போலீஸ், பிரஸ், வக்கீல் மற்றும் அரசு துறையின் கீழ் பணியாற்றுபவர்கள் அந்தந்த துறையின் லோகோ ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை ஒட்டி உள்ளனர். இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானதாகும். அரசு வாகனங்களில் மட்டுமே அந்தந்த துறையின் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட கண்டிப்பாக அனுமதி கிடையாது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றமும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது.
எனவே, திருக்கோவிலூர் பகுதியில் வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர்களை உடனடியாக தாங்களாகவே அகற்ற வேண்டும். அரசு அறிவித்துள்ளபடி நம்பர் பிளேட்டுகளில் நம்பர் தெரியும்படி இருக்க வேண்டும். வருகிற 20-ந்தேதியில் இருந்து திருக்கோவிலூர் நகரப் பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார். வீதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.