உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்திய 2பேர் கைது

Published On 2023-09-13 15:58 IST   |   Update On 2023-09-13 15:58:00 IST
  • 40 பைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
  • கிளாசிபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கு விற்பனை செய்ய எடுத்து சென்றனர்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார், நேற்று திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை கூட்டு ரோடு மேம்பாலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 50 கிலோ எடையளவு கொண்ட 40 பைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேனை ஓட்டி வந்த அதன் உரிமையாளரான திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமரன்(44) என்பவரை கைது செய்து, வேனை அரிசியுடன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, அதை பெங்களூர் கிளாசிபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார், குருபரப்பள்ளி அடுத்த எண்ணேகொல்புதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடையளவு கொண்ட 32 பைகளில் 1.6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்த அந்த வேனை ஓட்டி வந்த சுண்டேகுப்பம் முருகேசன்(22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த கோவிந்தராஜ்(எ)மெர்சல் என்பவர், கிருஷ்ணகிரி டேம், மணி நகர், செட்டிமாரம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று, குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, அதை பெங்களூருக்கு எடுத்து சென்று அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்து, அரிசியின் உரிமையாளரான கிருஷ்ணகிரி கோவிந்தராஜ் என்கிற மெர்சல் என்பவரை தேடி வருகிறார்கள்.

Similar News