காவிரி கரையில் இறந்து கிடந்த முதலை குட்டியால் பரபரப்பு
- திருச்சி சிந்தாமணி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய காவிரி கரையில் இறந்து கிடந்த முதலை குட்டியால் பரபரப்பு
- உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருச்சி
திருச்சி,மேல சிந்தாமணி, மகாத்மா காந்தி படித்துறையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குளித்து வருகின்றனர்.
கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருந்து வந்தது.
இதற்கிடையே இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு மற்றும் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்தப் பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆற்றின் கரையோரம் சுமார் ஒன்றரை நீளமுள்ள முதலைக்குட்டி ஒன்று கிழிந்த ஒரு வலையில் சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது.
அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும் முதலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
எனவே அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளதாக
அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றின் மையத்தில் உள்ள நாணல் புதரில் மறைந்த வசிக்கும் முதலைகள் குட்டிகளை ஈன்றிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுவரை அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் முதலைகள் நடமாட்டம் இருக்கும் தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே உடனடியாக முதலைகளைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.