உள்ளூர் செய்திகள்

பெண்ணை ஆபாசமாக படம் பிடித்த வாலிபர் கைது

Published On 2022-10-19 15:11 IST   |   Update On 2022-10-19 15:11:00 IST
  • அந்தோணியார் கோவில் தெரு பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பொது கழிப்பிடம் கட்டித் தரப்பட்டுள்ளது.
  • மணிகண்டன் என்பவர் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கழிவறைக்கு சென்ற போது அவருக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக செல்போனில் ஆபாச படம் எடுத்தார்.

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டி புதூர் மேட்டுத்தெரு மற்றும் அந்தோணியார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு இன்னமும் தனிநபர் கழிப்பிடம் என்பது எட்டாக் கனியாக உள்ளது.

அந்தோணியார் கோவில் தெரு பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பொது கழிப்பிடம் கட்டித் தரப்பட்டுள்ளது. இதனை மேற்கண்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்பவர் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கழிவறைக்கு சென்ற போது அவருக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக செல்போனில் ஆபாச படம் எடுத்தார்.

இதனை ஆண்கள் கழிப்பகத்திற்கு வந்த ஒருவர் பார்த்து எடமலைப்பட்டி புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மணிகண்டனை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அதில் அந்த பெண்ணின் ஆபாச படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பெயிண்டரான அவர் தினமும் அந்த கழிப்பிடத்திற்கு வந்து சென்றுள்ளார். ஆகவே வேறு பெண்களையும் அவர் ஆபாசமாக படம் எடுத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News