உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதிகள் இல்லாத ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர் விடுதி

Published On 2022-08-07 14:54 IST   |   Update On 2022-08-07 14:54:00 IST
  • திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
  • மாணவர்கள் வெளியில் ஓட்டல்களுக்கு சென்று பணம் கொடுத்து சாப்பிட நிர்பந்திக்கப்படுகிறார்கள். விடுதி அறைகளின் பூட்டுகள் உடைந்து கிடக்கின்றன

திருச்சி:

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர் விடுதி அமைந்துள்ளது. இங்கு 80 மாணவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்கி உள்ளனர். இவர்கள் திருச்சியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மேற்கண்ட விடுதியில் மாணவர்களுக்கு சீராக உணவு வழங்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இது பற்றி விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள் கூறும்போது, இந்த விடுதியில் சீராக உணவு வழங்குவதில்லை.

இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் வெளியில் ஓட்டல்களுக்கு சென்று பணம் கொடுத்து சாப்பிட நிர்பந்திக்கப்படுகிறார்கள். விடுதி அறைகளின் பூட்டுகள் உடைந்து கிடக்கின்றன. அறையில் வைக்கும் எந்த பொருளுக்கும் பாதுகாப்பு இல்லை.

மேலும் சீரான எலக்ட்ரிக் வயரிங் செய்யப்படவில்லை. இதனால் எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் பயன்படுத்துவதால் ஷாக் அடித்து மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கழிப்பிடங்கள் மற்றும் குளியலறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் குடிநீர் வசதிகளும் சீராக இல்லை.

ஆகவே உடனே கலெக்டர் விடுதியில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News