துறையூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட 2 பேர் கைது - வாகன சோதனையில் சிக்கினர்
- கிருஷ்ணசாமி (71). பாலக்கரை அருகே உள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகையை அடமானம் வைத்து 1 ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
- இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் கிருஷ்ணசாமியிடம் பணப்பையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
திருச்சி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (71). இவர் கடந்த 7 -ந்தேதி துறையூர் பாலக்கரை அருகே உள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகையை அடமானம் வைத்து 1 ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
பிறகு பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு பாலக்கரை அருகே வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் பணப்பையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணசாமி அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று சொரத்தூர் பிரிவு சாலை அருகே துறையூர் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை மறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் ஒரு நபர் பொள்ளாச்சி அருகே உள்ள அங்காளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் (22) என்பதும், மற்றொரு நபர் பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய வாலிபர் என்பதும் இருவரும் சேர்ந்து கிருஷ்ணசாமி என்பவரிடம் பணப்பையை பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 இரு சக்கர வாகனம், பணம் ரூபாய் 2000 ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு தினேஷ் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயதுடைய வாலிபரை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.