உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.  

கல்லூரிக்கனவு கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2023-04-26 09:12 GMT   |   Update On 2023-04-26 09:12 GMT
  • ஆலோசனை குழுவை அணுகி உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.
  • மாணவர்களை கண்டறிந்து அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பணிகளை சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும்.

தருமபுரி

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் கல்லூரிக்கனவு மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் கலெக்டர் சாந்தி பேசும்போது தெரிவித்ததாவது:-

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பயிற்சிகள் 24.4.2023 முதல் 5.5.2023 வரை நடைபெறுகின்றது. இதில் மாணவர்களின் நலன் மற்றும் முழு வளர்ச்சியில் வெவ்வேறு பங்குரிமையாளர்களான (Stakeholders) தலைமையாசிரியர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளர், பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள், மாணவர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட, தொடர் பங்களிப்பை வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

நடப்பாண்டில் நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்படவிருக்கும் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல், ஆலோசனை வழங்குதல் குழு (Career Guidance Cell) வருகின்ற 06.05.2023 முதல் செயல்படவுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் இந்த ஆலோசனை குழுவை அணுகி உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

மேலும் இந்த குழுக்கள் இது போன்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பணிகளை சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள் ரவிக்குமார், சம்பத்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் தெரேசாள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News