உள்ளூர் செய்திகள்

நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகுசவாரி செய்யும் பயணிகள்.

கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணத்தை அனுபவிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-11-27 05:04 GMT   |   Update On 2022-11-27 05:04 GMT
  • பனிப்பொழிவு இருந்தாலும் பகல் பொழுதில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
  • கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவியதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது.

தற்போது பனிப்பொழிவு இருந்தாலும் பகல் பொழுதில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க விடுமுறை நாளான இன்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

இதனால் வியாபாரிகள், தங்கும் விடுதி, ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெள்ளிநீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் முன்பு உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

பசுமை பள்ளத்தாக்கு, பில்லர்ராக், மோயர்பாயிண்ட், ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ்வாக், வட்டக்காணல் அருவி, பாம்பார் அருவி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒரே நேரத்தில் அதிகளவு சுற்றுலா வாகனங்கள் வந்ததால் ஏரிச்சாலை, கலையரங்கம், செவன்ரோடு, லாஸ்காட் சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News