வால்பாறையில் இன்று கல்லறை திருநாள் அனுசரிப்பு
- காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.
- நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக அங்கு காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து வால்பாறை திருஇருதய ஆலய கல்லறை தோட்டத்துக்கு சென்ற கிறிஸ்தவர்கள், அங்கு உள்ள கல்லறைகளுக்கு வர்ணம் பூசி மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து வால்பாறை திருஇருதய ஆலய பங்குதந்தை ஜெகன்ஆன்டனி தலைமையில் இறந்தோருக்கான விசேஷ திருப்பலி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதேபோல வால்பாறை புனிதலூக்கா ஆலயத்தில் பங்கு தந்தை தலைமையில் விசேஷ பிரார்த்தனைகள் நடந்தன. மேலும் சி.எஸ்.ஐ ஆலயம், முடிஸ் புனித அந்தோணியார் ஆலயம், ரொட்டிக்கடை வனத்து சின்னப்பர் ஆலயம் மற்றும் சோலையார் அணைப்பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.