சேலம் மார்க்கெட்டுக்கு 30 டன் திராட்சை வரத்து
- இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சீட்லெஸ் திராட்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
- இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் திராட்சை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
சேலம்:
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி, ஜர்த், மிர்சேஜ், பண்டரிபூர், சோலாப்பூர், கோலாப்பூர், மணிராஜா உள்ளிட்ட பகுதிகளில் சீட்லெஸ் திராட்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் திராட்சை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மகாராஷ்டிராவில் சீட்லெஸ் திராட்சை அமோக விளைச்சலை தந்துள்ளது. இதையடுத்து சேலம் மார்க்கெட்டுக்கு சீட்லெஸ் திராட்சையின் வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, சேலம் கடைவீதி பழ வியாபாரிகள் கூறுகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 200 கிலோமீட்டர் சுற்றளவில் சீட்லெஸ் திராட்சை சாகுபடி நடக்கிறது. அங்கிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சீட்லெஸ் திராட்சை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரவில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு சீட்லெஸ் திராட்சை வரத்து அதிகரித்துள்ளது. சீசன் தொடக்கத்தில் 10 டன்னாக இருந்தது.
இவை அதிகரித்து, நேற்யை நிலவரப்படி நாள் ஒன்றுக்கு 30 டன் சீட்லெஸ் திராட்சை விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 1½ மாதத்திற்கு சீட்லெஸ் திராட்சையின் வரத்து இருக்கும், சில்லரையில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்து வருகின்றனர்.