உள்ளூர் செய்திகள்

ஜவ்வாதுமலையில் இருந்து பழம்லோடு ஏற்றி வருபவர்களிடம் வனத்துறை ஊழியர் லஞ்சம் கேட்கும் வீடியோ

Published On 2022-11-03 14:58 IST   |   Update On 2022-11-03 14:58:00 IST
  • சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு
  • வனத்துறை அதிகாரிகள் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகில் நாடானூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லாத்தூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட சீத்தாப்பழங்களை அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்னைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த வனகாப்பாளர் ஒருவர் சீத்தாப்பழம் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றால் ரூ.1,000 கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், மலை வாழ்மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் நான் சீத்தாப்பழத்திற்கு பணம் கேட்கவில்லை.

அதன் மேலே போட்டு வைத்து உள்ள இலைகளை வனப்பகுதியில் இருந்து எடுத்துள்ளீர்கள். அதற்கு தான் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றார்.

சில நிமிடங்களில் நான் அபராதம் போட்டால் கட்டமாட்டீங்களா என்று கேட்டப்படி அவர் வாகனத்தில் சாராயம் கடத்துவதாக எனக்கு புகார் வந்து உள்ளது என்று கூறி சீத்தாப்பழம் லோடை கீழே இறக்கும் படி கூறினார். இதுவரைக்கும் நாங்கள் சீத்தாப்பழத்துக்கு யாருக்கும் பணம் கொடுத்தது இல்லை.

உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என்று மலை வாழ்மக்களும் கண்டிப்புடன் பேசினர். இந்த உரையாடல் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வன ஊழியரை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News