திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
- அழுகிய நிலையில் உடல் மீட்பு
- போலீசார் விசாரணை
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடி மாணிக்க நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன்கள் சுரேஷ் (வயது 33), பிரகாஷ் (31). சுரேசுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். பிரகாஷ் கன்டெய்னர் டிரைவராக பணியாற்றி வந்தார்.
பிரகாஷ் தனது அண்ணன் சுரேஷ் வீட்டுக்கு பின்னால் ஒரு தகர செட் அமைத்து அதில் வசித்து வந்தார். தனக்கு திருமணமா காததாலும், தந்தை மனநிலை பாதிக்கப்பட்டதாலும், தாய் இறந்துவிட்ட நிலையிலும் பிரகாஷ் விரக்தியில் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் பிரகாஷ் தான் வசித்த கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை யாரும் பார்க்காத நிலையில் 3 நாட்களுக்கு மேலானதால் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தானிப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.