போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்
- சாலைகளை விரிவு செய்ய வேண்டும்
- அமைச்சர் எ.வ.வேலு தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசியதாவது:-
புதிய பட்டா பெற வேண்டுபவர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு சரியான முறையில் இருந்தால் தகுதி வாய்ந்த நபர்கபளை செய்து செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 42 லட்சம் பக்தர்கள் வந்தனர். அப்போது பஸ்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லாமல் இருந்தது.
புதிய பஸ் நிலையம் வரப்பெற வருவாய்த்துறை பெரும் உதவியாக இருந்தது. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள 19 வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து பட்டா வழங்க வருவாய்துறை அரசு விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் நகர்ப்புற சாலைகளை விரிவுப்படுத்துவது இன்றியமையாதது. சாலைகளை விரிவு செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். அதன் அடிப்படையில் தான் திருவண்ணாமலை முதல் செங்கம், வேலூர் முதல் சித்தூர் சாலை மற்றும் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.