உள்ளூர் செய்திகள்

 ஒன்றியக்குழுக் கூட்டத்தின் போது இளைஞர்கள் வெற்று வெள்ளைத் தாளை மனுவாக அளித்த காட்சி.

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெற்று தாளை மனுவாக அளித்த இளைஞர்கள்

Published On 2022-11-08 15:14 IST   |   Update On 2022-11-08 15:14:00 IST
  • கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி வலியுறுத்தல்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வந்தவாசி:

வந்தவாசியில் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வி.மூர்த்தி, ஆர்.குப்புசாமி, துணைத்தலைவர் ஆர்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3.10 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு 4 மாதங்களாகிறது. ஆனால் அந்த கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

ஒன்றிய பொது நிதியிலிருந்து ஊராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கும்போது, அதுகுறித்த முழு விவரம் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை என்று ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.சக்திவேல் புகார் தெரிவித்து பேசினார்.

இந்த நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே உள்ளே வந்த கீழ்சாத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாம்பட்டு அண்ணா நகர் இளைஞர்கள் சிலர், எதுவும் எழுதப்படாத வெற்று வெள்ளைத் தாளை மனுவாக வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தியிடம் வழங்கினர்.

அப்போது, மாம்பட்டு அண்ணா நகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரேசன் கடை கட்டிடம், துணை சுகாதார நிலையக் கட்டிடம் ஆகியவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய சாலை வசதி ஏற்படுத்த வேண்டும், அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், மனு அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்த்தும் வகையிலும், இப்போது வெற்று வெள்ளைத் தாளை நாங்கள் மனுவாக அளிக்கிறோம் என்றனர்.

இதையடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை எடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Tags:    

Similar News