உள்ளூர் செய்திகள்

புதுப்பிக்கப்பட்டுள்ள முருகர் தேர்.

திருவண்ணாமலையில் இன்று நடைபெற இருந்த தேர் வெள்ளோட்டம் திடீர் ரத்து

Published On 2022-11-20 14:20 IST   |   Update On 2022-11-20 14:20:00 IST
  • புதுப்பிக்கப்பட்ட முருகர் தேரை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளனர்
  • மகா தீப விழா ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் காலை, இரவு என இருவேளையில் சாமி திருவீதி உலா நடைபெறுகின்றன. ஏழாம் நாள் அன்று மகா தேரோட்டம் நடைபெறுகிறது.

டிசம்பர் 6ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. கார்த்திகை தீபக் திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன.

இவ்விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது நடைபெற்ற தேர் திருவிழாவில் முருகர் தேர் பக்தர்கள் இழுத்துச் சென்றபோது திடீரென வழியில் பழுது ஏற்பட்டு நின்றது. அப்போது தற்காலிகமாக அப் பணியை சீர் செய்து தேரோட்டம் முடிக்கப்பட்டன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணத்தால் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சுமார் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் முருகர் தேர் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தன. இப்பணிகள் முடிக்கப்பட்டு இன்று தேர் வெள்ளோட்டம் நடைபெறுவதாக கோவில் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் இன்று பொதுப்பணித்துறையின் தேரின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்காத காரணத்தால் காலை திடீரென தேர் வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக இன்று பொதுப்பணித்துறையினர் புதுப்பிக்கப்பட்ட முருகர் தேரை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு செய்த பிறகு அவர்கள் உறுதித் தன்மை சான்றிதழ் வழங்கிய பின்பு தேர் வெள்ளோட்டம் மற்றொரு நாளில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News