உள்ளூர் செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

Published On 2022-09-01 14:57 IST   |   Update On 2022-09-01 14:57:00 IST
  • சாத்தனூர் அணையில் இருந்து 10,340 கன அடி நீர் வெளியேற்றம்
  • தரைப் பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது

திருவண்ணாமலை:

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 340 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கலாம்.

சாத்தனூர் அணை மூலம் திருவண்ணாமலை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேலும் 90-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகள் நீர் ஆதாரங்களை பெறுவதோடு 50-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 340 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் ஏற்கனவே அணை நீர்மட்டம் 117 அடியை எட்டி 6,875 மில்லியன் கன அடி நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 10 ஆயிரத்து 340 கனஅடிநீரும் அப்படியே மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக திருக்கோவிலூர் வழியாக கடலூர் நோக்கி செல்லும் தென்பெண்ணை ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஆங்காங்கே உள்ள தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளன.

சில இடங்களில் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த வெள்ளம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்றும் தரைப்பாலத்தை கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News