உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை நகராட்சியில் காய்கறி, பழ கடைகளுக்காக ரூ.30 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம்

Published On 2023-03-28 14:15 IST   |   Update On 2023-03-28 14:15:00 IST
  • நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்
  • சாலை மற்றும் கால்வாய் பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகார்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் காய்கறி, பழ கடைகளுக்காக ரூ.30 கோடியில் வணிக வளாகம் கட்டப்படும் என்று நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகரமன்ற கூட்டம் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நகரமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜாங்கம், பொறியாளர் நீலேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் நகரமன்ற வார்டு உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் கூறுகையில்:-

39 வார்டுகளிலும் பாரபட்சமின்றி பணிகள் நடைபெற்று வருகிறது. வார்டுகளில் எந்த குறைகள் இருந்தாலும் உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தால் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மற்றும் கால்வாய் பணிகள் தரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

தொடர்ந்து வார்டு உறுப்பினர் தாங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர்.

வணிக வளாகம் கூட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமான காந்தி நகரில் உள்ள காலியிடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரைத்தளத்தில் காய்கறி மற்றும் பழக்கடைகளும், முதல் தளத்தில் 121 பூக்கடைகளும் என 249 கடைகள் கொண்ட வணிக வளாகம் ரூ.30 கோடியே 10 லட்சத்தில் கட்டுவதற்கு திட்ட அறிக்கை அனுப்புவது என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News