உள்ளூர் செய்திகள்

பைக் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2023-04-21 09:23 GMT   |   Update On 2023-04-21 09:23 GMT
  • தாய், மகன் படுகாயம்
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் அடுத்த எட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 65). இவரது மனைவி கிளியம்மாள் (45). இவர்களுக்கு வெங்கடேசன் (25), விக்னேஷ் (21) என 2 மகன்கள் உள்ளனர். விக்னேஷ் கலசபாக்கம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

வெங்கடேசன் வேலூர் இடையஞ் சாத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கிளியம்மாள் சித்தாள் வேலை செய்து வருகிறார்.

நேற்று வேலை சம்பந்தமாக கிளியம்மாள், வெங்கடேசன், விக்னேஷ் ஆகியோர் பைக்கில் வேலூருக்கு வந்தனர். பின்னர் இரவு வேலூரில் இருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலார்த்து வென்றான் கிராமத்தில் அருகே வரும்போது எதிரே வந்த தனியார் பஸ் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் விக்னேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கிளியம்மாள், வெங்கடேசன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தட்சிணாமூர்த்தி சந்தவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News